பாலக்கோடு, அக். 27 -
பாலக்கோடு வட்டம் எர்ரனஅள்ளி ஊராட்சி ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்காததை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரெட்டியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், மக்கள் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், காலி குடங்களுடன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ஜி. பாண்டியம்மாள் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் எம். முத்து, வட்டச் செயலாளர் சி. ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி. காரல் மார்க்ஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. கோவிந்தசாமி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டத் தலைவர் ஜி. நக்கீரன், என். வரதராஜன், வாலிபர் சங்கத்தின் பகுதி தலைவர் வீ. ரவி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அஜித்குமார், மாற்றுத்திறனாளி வட்டச் செயலாளர் மாதேஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர், சங்கத் தலைவர்கள் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 15 நாட்களுக்குள் ரெட்டியூர் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

.jpg)